ரஜினிகாந்த்
தமிழக அரசியல் களத்தில் ரஜினிகாந்த் நீண்ட காலமாகவே பரபரப்பாக பேசப்படும் நபராக இருந்து வருகிறார். 1995-ம் ஆண்டு “பாட்சா” படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்று பேசிய ரஜினி அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. அரசு மீது கூறிய குற்றச்சாட்டுகள் அதிர்வலையை ஏற்படுத்தின.
தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகி விட்டது என்றும், மீண்டும் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டால் அந்த ஆண்டவனாலும் உங்களை காப்பாற்ற முடியாது என்று ரஜினி பேசிய ஆவேச பேச்சு இப்போதும் பேசப்படும் விஷயமாகவே உள்ளது.
ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு 10 பேர் சேர்ந்து ஒருவனை எதிர்க்கிறார்கள் என்றால் யார் பலசாலி என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று நேரடியாக பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பேசி இருந்தார் ரஜினிகாந்த்.
மேலும் இந்திய அரசியலில் மோடி அவர்களும் அமித்ஷா அவர்களும் ராமர் அர்ஜுனன் போன்றவர்கள் என பேசி இருந்தார். சமீபத்தில் கூட உத்திரபிரதேசம் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் அந்த மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
உண்மை என்ன..?
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு கவர்னர் பதவி கொடுக்க இந்திய அரசு தரப்பில் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் அதற்கு இசைவு தெரிவித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்து அதிகாரப்பூர தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த தகவல்கள் அரசியல் வட்டாரத்திலும் இணைய வட்டாரத்திலும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் அல்லது கர்நாடக மாநிலத்தின் கவர்னராக நடிகர் ரஜினிகாந்த் பொறுப்பேற்க வாய்ப்பு இருப்பதாக பலரும் கூறுகிறார்கள்.
இந்த தகவல் உண்மைதானா..? அல்லது வதந்தியா.? என்பது நடிகர் ரஜினிகாந்த் அல்லது இந்திய அரசு சார்பில் ஏதேனும் தகவல்கள் வெளியானால் மட்டுமே உறுதிப்பட சொல்ல முடியும். தற்போது வரை இதை ஒரு வதந்தியாக மட்டுமே பார்க்கலாம்.