தீபா வெங்கட்
சிம்ரன், ஜோதிகா, நயன்தாரா, அனுஷ்கா, சினேகா உள்ளிட்ட தமிழின் பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்தவர் தீபா வெங்கட். இவரது குரல் வளமை மற்றும் டப்பிங் திறமைக்காக தனி ரசிகர் கூட்டம் சேர்ந்துவிட்டது. அஜித் நடித்த பாசமலர்கள் என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக திரையில் தோன்றினார்.
அஜித் மற்றும் விக்ரம் இணைந்து நடித்த உல்லாசம் திரைப்படத்திலும் நடித்தார். விக்ரம் நடித்த “தில்” திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து இருப்பார். உள்ளம் கொள்ளை போகுதே, திரைப்படத்தில் பிரபுதேவா தங்கையாக நடித்திருப்பார். இரண்டு திரைப்படங்களிலும் இவரது நடிப்பு மற்றும் அண்ணன்-தங்கை பாச பிணைப்பு கதாபாத்திரம் ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது.
சின்னத்திரையிலும் தீபா வெங்கட் பிரபலமடைந்தார். 1996 வருடம் சன் டிவியில் ஒளிபரப்பான “இப்படிக்கு தென்றல்” என்ற சீரியல் தீபாவுக்கு முதல் தொலைக்காட்சி தொடர் ஆகும். சித்தி சீரியல், தீபா வெங்கட்டுக்கு பெரும் புகழை பெற்றுக்கொடுத்தது.
90ஸ்கள் மற்றும் 2000மாவது ஆண்டு தொடக்கங்களில் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் தீபா வெங்கட் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்தார். எனவே, தொடர்ந்து ரசிகர்களின் பார்வையில் அவர் பட்டுக் கொண்டே இருந்தார்.
எடிட் பண்ணி வீடியோ போட்டாங்க
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துக் கொண்ட தீபா வெங்கட், பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், “நிறைய யூடியூப் சேனல்கள் என்னை பற்றி போலியான செய்திகளை வெளியிடுகின்றனர்.
என்னுடைய புகைப்படத்தை வைத்து கண்ணீர் அஞ்சலி போஸ்ட் மற்றும் வீடியோ வந்திருக்கிறது. அதைப் பார்த்து என்னுடைய அம்மா அப்பா உறவினர்கள் கூட நிறையவே வருத்தப்பட்டார்கள்.
அவர்களுக்கு அது எவ்வளவு வலியை ஏற்படுத்தியிருக்கும். இது போன்ற ஒரு வீடியோவை எதற்கு செய்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. உங்களுக்கும் குடும்பம், பெண்கள் இருக்கிறார்கள் தானே. ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? என மனமுடைந்து பேசியுள்ளார்.