மலையாள நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கொல்லம் சுதி இன்று அதிகாலை நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 39.
இன்று (ஜூன் 5) அதிகாலை 4.30 மணியளவில் திரிச்சூர் மாவட்டம், கைப்பமங்கலம் அருகே, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு நடிகர் சுதி, தனது காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் ஒன்றில் கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நடிகர் சுதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த அவரை அருகில் இருந்த பொதுமக்கள், கொடுங்கலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுதி உயிழந்தார்.
2015ஆம் ஆண்டு வெளியான ‘காந்தாரி’ படத்தின் மூலம் கொல்லம் சுதி சினிமாவில் அறிமுகமானார் . ‘கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்’, ‘குட்டநாடன் மர்ப்பப்பா’, ‘கேசு ஈ வீட்டை நாடன்’, ‘எஸ்கேப்’, ‘ஸ்வர்கத்திலே காட்டுறும்பு’ ‘கொல்லம்’ உள்ளிட்ட பல படங்களில் சுதி நடித்துள்ளார்.
பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் தனது மிமிக்ரி திறமை மூலமாக சுதி பிரபலமானார்.கொல்லம் சுதியின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.