ஆச்சி மனோரமா
தமிழ் சினிமா உலகில் மிகச் சிறந்த பழம் பெரும் நடிகை மனோரமா. தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் நடிகை மனோரமா அவர்கள் “ஆச்சி” என அழைக்கப்பட்டார். நடிகை மனோரமா அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மன்னார் குடியில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் கோபி சாந்தா.
இவருடைய பனிரெண்டாவது வயதில் நடிப்புத் தொழிலில் இறங்கினார். நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் தான் இவருக்கு “மனோரமா” எனப் பெயர் சூட்டினர்.
அவர் நடித்த முதல் படம் சில காரணங்களால் வெளிவராமல் போக, பின்னர் கண்ணதாசன் இயக்கிய மாலையிட்ட மங்கை, அவரது அறிமுக படமாக வெளிவந்து அவரை புகழடையச் செய்தது. திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த மனோரமா, சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த ஒரே நடிகை
தனது திரை வாழ்க்கையில் சி.என்.அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் வசனமெழுதிய படங்களில் நடித்திருக்கிறார் மேலும் இவர்கள் இருவருடன் இணைந்து மேடை நாடகங்களில் பங்கு பெற்றிருக்கிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் ஆகியோருடன் இணைந்து படங்களில் நடித்திருக்கிறார். மொத்தத்தில் ஆச்சி 5 முதல்வர்களுடன் படங்களில் இணைந்து பணியாற்றிருக்கிறார்.