நடிகர் பாபு
திரைத்துறையில் மிகப்பெரும் கலைஞனாக வந்திருக்க வேண்டியவன் என நடிகர் பாபு மறைவிற்கு இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். இயக்குநர் பாரதிராஜாவின் ‘என் உயிர் தோழன்’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் பாபு நேற்றிரவு உடல்நலக் குறைவால் காலமானார்.
தனது ஐந்தாவது படமாக ‘மனசார வாழ்த்துங்களேன்’ என்கிற படத்தின் படப்பிடிப்பு தான் அவரது மொத்த வாழ்க்கையையும் புரட்டிப் போட்டது. அந்தப் படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் டூப் போடாமல் நடித்ததால் அவர் எதிர்பாராத விபத்துக்குள்ளாகி முதுகுப் பகுதியில் அடிபட்டு படுத்த படுக்கையாகிப் போனார்.
அந்த வகையில் தமிழ் சினிமாவின் 90 காலகட்டங்களில் கொடிகட்டி பறந்த நடிகர் பாபுவும் இப்படி ஒரு அவள நிலையை சந்தித்து இருக்கிறார். கிராமத்து மண் வாசனை மாறாமல் படம் எடுக்கும் பாரதி ராஜா அறிமுகம் செய்த எத்தனையோ நடிகர் நடிகைகளில் நடிகர் பாபுவும் ஒருவர் தான்.
இயக்குநர் பாரதிராஜா உருக்கம்
பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1990-ம் ஆண்டு வெளியான என் உயிர் தோழன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாபு.இந்த படத்தில் அடிமட்ட அரசியல் தொண்டனாக வந்து அனைவரையும் தனது நடிப்பால் கவர்ந்தவர். “என் உயிர்த் தோழன்” படத்திற்கு பின்னர் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.
கிட்டத்தட்ட 14 படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டார் பாபு. தாயம்மா, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு உள்ளிட்ட உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை திரையில் அறிமுகப்படுத்திய இயக்குநர் பாரதிராஜா நேரில் சென்று நலம் விசாரித்து தேம்பியழுத வீடியோ பலரையும் நெகிழச் செய்தது.
பாபுவின் 80 வயதான தாயார் மட்டுமே அவரை உடனிருந்து இறுதி வரை கவனித்து வந்தார். இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.