நடிகர் போண்டா மணி
தமிழ் சினிமாவில் கொமடி நடிகராக வலம் வந்த போண்டா மணி, வடிவேலு, விவேக் உட்பட பல கொமடி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பில் ஏற்பட்ட விஷவாயு தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட போண்டா மணி சென்னை மருத்துவமனை ஒன்றில், தீவிர சிகிச்சை எடுத்து வந்தார்.
இதுகுறித்து பேசிய போண்டா மணி, தற்போது ஆறு மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளேன். சமீபத்தில் படப்பிடிப்பில் சாக்கடையில் விழும் சீன் எடுக்கப்பட்ட போது, அதனை தத்ரூபமாக நடிக்க வேண்டும் என்று நிஜ சாக்கடையில் என்னை விழ வைத்தனர்.
அந்த சாக்கடை தண்ணீர் எனது நுரையீரலுக்குள் சென்றதால் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்பொழுது தான் தனது இரண்டு சிறுநீரகமும் செயலிழந்தது தெரியவந்துள்ளது என்று கவலையுடன் தெரிவித்துள்ளார்.
காலமானார்
இந்த நிலையில், நேற்று (டிச.23) இரவு 11.30 மணியளவில் பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் உள்ள தனது வீட்டில் நடிகர் போண்டா மணி திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை அவரது உறவினர்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றுள்ளனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். போண்டா மணியின் மறைவுக்கு சமூக வலைதளங்களில் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.